Friday, October 16, 2015

ஜெய் ஸ்ரீ ராம்


1.துன்பங்களை தீர்க்கும் ஆஞ்சநேயர் பற்றி இங்கே எழுதலாம் என்று நினைக்கிறேன்
காரணம் திடிரென்று அவர் பற்றி எழுததோன்றியது. பல காரணங்கள் இதற்கு இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் அவர் எனக்கு எல்லமுக எல்லா துன்பங்களிலும் இருப்பவர் இன்னும் சொல்வதென்றால் எனது மானசீக குரு கூட அவர் தான்.

ஆஞ்சநேயர் என்றல் பலம், வீரம்,சாகா  வரம் என்பன கை வரப்பெற்றவர். அவரது பலம் ராமாயணத்தில் இறுதி யுத்தத்தில் அதாவது ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்த போரில் ராமன் வெற்றி பெற்று தர்மம் மீண்டும்  வெல்ல  ராமனுக்கு பக்க பலமாக எல்லா சந்தர்ப்பங்களிலும் இருந்தது ஆஞ்சநேயர் தான். இதோ அவரது வரலாற்றை இங்கே பதிவிடுகிறேன்.
ஜெய் ஸ்ரீ ராம்.

ஆஞ்சநேயர்  வரலாறு.

அரசனான தசரதன் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த யாகத்தின் பிரசாதமான பாயாசத்தை, ஒரு கருடன் கொத்திக் கொண்டு போனது. அந்தப் பிரசாதம் அஞ்சனையின் கையில் போய் விழுந்தது. அதைச் சாப்பிட்ட கேசரி– அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்குச் சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.  அந்தக் குழந்தைக்கு ஒருநாள் பசி எடுத்தபோது, வானத்தில் தெரிந்த சூரியனைப், ‘பழம்’ என நினைத்து அதைச் சாப்பிட வானிற்குச் சென்றது. வானம் நோக்கி வந்த குழந்தையை இந்திரன் தன்னிடமிருந்த ஆயுதத்தால் தடுத்து நிறுத்தினார். இதில் அந்தக் குழந்தையின் தாடை சற்று வளைந்ததால் ‘அனுமன்’ என்று பெயர்பெற்றார். அனுமன் என்பதற்கு ‘வளைந்த தாடையை உடையவன்’ என்று பொருள்.

வளர்ந்து பெரியவனான அனுமன், சீதையைத் தேடி வந்த ராமனிடம் அன்பு கொண்டான். அந்த அன்பு பக்தியாக மாறியது. அனுமன் ராமனையே இறைவனாக வழிபடத் தொடங்கினான். இறைவன் மேலான பக்தியை மூன்று வகைகளாகக் குறிப்பிடுகின்றனர். இறைவன் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ இருந்து நம்மைக் காத்து அருள்கிறார் என்கிற எண்ணத்துடன் இறைவனை நினைத்து வழிபடுவது முதல் வகை. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் இறைவன் இருப்பதாக நினைத்து அவைகளிடம் அன்பு செலுத்தி இறைவனை வழிபடுவது இரண்டாவது வகை. இறைவன் தன்னுள்ளேயே இருக்கிறார், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை. இதில் அனுமன், ராமனிடம் கொண்ட பக்தியும், வழிபாடும் மூன்றாவது வகையைச் சேர்ந்தது.

அனுமன், சீதையை மீட்பதற்காக முதலில் ராமனின் தூதுவனாகச் சென்றார். பின்னர் ராவணனை அழிப்பதற்கான போரில் ராமனுக்குத் துணையாகச் சென்றார். அனுமன் தனது ராம பக்தியினாலும், தன்னலமற்ற சேவையினாலும் ராமாயண இதிகாசத்தில் ராமன், சீதைக்கு அடுத்த நிலையில் உயர்ந்து நின்றார்.
2.அனுமன் கோவில்கள்  

தன்னலமற்ற சேவையினால் உயர்ந்து நின்ற அனுமனுக்கு இந்தியாவின் சுசீந்திரம், நாமக்கல், நங்கநல்லூர், தெய்வச்செயல்புரம், குலசேகரன்கோட்டை, பஞ்சவடி என்று பல ஊர்களில் மிக உயரமான சிலைகள் அமைக்கப்பட்டும், பல ஊர்களில் தனிக்கோவில்கள் அமைக்கப்பட்டும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி அமைக்கப்பட்ட கோவில்களில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டிக்கு அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்றாக இருக்கிறது.

3.தல வரலாறு
பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அனுமன், இந்த இடத்தில் தான் தியான கோலத்தில் இருப்பதாகவும், இங்கு தனக்குக் கோவில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார். இதைத் தொடர்ந்து அந்த பக்தரின் முயற்சியினால் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலில் மூலவரான ஆஞ்சநேயர், ‘வணங்கிய நிலை’யில் 16 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரது மார்பில் சிவலிங்கம் உள்ளது. கால்களில் காலணி அணிந்து, இடுப்பில் கத்தி சொருகியபடி, கதாயுதத்துடன் போர்க்கோலத்தில் இருப்பது போன்று அவரது உருவம் வடிக்கப்பட்டிருக்கிறது.
நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் செய்யப்பட்டது இந்தச் சிலை. அனுமனின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன். இவரது கேசம் ஒளிவட்டம் போன்றும் வடிக்கப்பட்டுள்ளது. சிவனைப் போன்று ஜடாமுடியுடன் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் கல்வி, செல்வம் ஆகியவற்றுடன் நீண்ட ஆயுள் கிடைக்கும். அனுமனின் வால் காலை நோக்கிக் கீழாக அமைந்திருக்கிறது. மேலும் இத்தல அனுமனை வழிபட்டால் சனி, ராகு போன்ற கிரகங்களின் தோஷங்கள் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோவிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆஞ்சநேயர் போர்க்கோலத்தில் இருப்பதால் கோவிலின், மகாமண்டபத்தில் அவரது துணைவர்களான நளன், நீலன், அங்கதன், குமுதன், சுக்ரீவன், ஜாம்பவான், ஜிதன், ஜூவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன. கோவில் வளாகத்தில் ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளும், கோவிலின் சுற்றுப்பகுதியில் லட்சுமி, சரஸ்வதி சிலைகளும் இருக்கின்றன.
ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் போது, இங்கு அவருடைய கால் பதிந்ததாகவும், சஞ்சீவி மலையிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோவிலின் எதிரில் உள்ள சிறு மலை என்றும் கூறுகின்றனர்.
4.சிறப்பு வழிபாடுகள்
ஆஞ்சநேயர் பிறந்த நட்சத்திரமான மூலம் நட்சத்திர நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இங்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தை மாதம் முதல் நாளில் 5,008 கரும்புகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம், சித்திரை மாதம் முதல் நாளில் பத்தாயிரம் கனிகளைக் கொண்டு அலங்காரம், ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரம், புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் முதலாவது சனிக்கிழமை ராஜ அலங்காரம், இரண்டாவது சனிக்கிழமையில் செந்தூர அலங்காரம், மூன்றாவது சனிக்கிழமை பச்சை அலங்காரம், நான்காவது சனிக் கிழமை சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அலங்காரம், ஐந்தாவது சனிக்கிழமை பத்மாசனத்தில் தியான அலங்காரம் என்று பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்ற


இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் ஆண்டு வழிபாடு நடக்கிறது. இதைத் தொடர்ந்து வரும் மூலம் நட்சத்திர நாளில் 508 லிட்டர் பாலாபிஷேகம், 108 கலசாபிஷேகம், 7 வருணாபிஷேகம் நடைபெறுகின்றன. அடுத்த நாள் மகாபாரத காலத்தில் பீமனுடன் வாதம் புரிந்த வயோதிக ஆஞ்சநேயர் அலங்காரம், அதையடுத்து கருடர், வராகர், நரசிம்மர், ஹயக்கிரீவர் மற்றும் ஆஞ்சநேயரின் வடிவம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகிறது.

4.அமைவிடம்
திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சின்னாளபட்டி. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேட்டுப்பட்டியில்தான் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.

5.சனி தோஷம் விலக்கும் அனுமன் வழிபாடு
ராமன், வானரப் படைகளுடன் இலங்கை செல்வதற்காகக் கடலில் சேதுபாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது. சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் வானரப் படைகள் அந்தப் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. அனுமன் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின் மீது ‘வெற்றி ராமனுக்கே’ என்று எழுதிக் கடலில் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சனிபகவான், ‘அனுமனே, இப்போது உனக்கு ஏழரைச்சனிக் காலம் தொடங்குகிறது. என் பணியைச் செய்ய உன் உடலில் எனக்கு ஒரு இடம் கொடு’ என்றார்.
‘சனி பகவானே! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்ல வேண்டும். அதற்காகவே இந்த சேதுபாலப் பணியை சேவையாக செய்து கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், தாங்கள் என் உடல் முழுவதும் எடுத்துக் கொள்ளலாம். அதுவரை பொறுத்தருள வேண்டும்’ என்றார் அனுமன்.
அதற்கு சனி பகவான் ஒப்புக்கொள்ளவில்லை. ‘அனுமனே, காலதேவன் எனக்குக் கொடுத்த கால அளவை நான் மீற முடியாது. உன் உடலின் எந்தப் பாகத்தில் நான் இருக்கலாம் என்பதை மட்டும் தெரிவித்திட வேண்டும்’ என்றார்.
இதனால் அனுமன், ‘என் கைகள் ராமனுக்கான பணியில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது தங்களை அவமதிப்பதாகும். நீங்கள் என் தலை மீது அமர்ந்து உங்கள் கடமையைச் செய்யுங்கள்’ என்றபடி அனுமன் தலை வணங்கி நிற்க, அவர் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன்.
அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கி வந்த அனுமன், சனிபகவான் தனது தலை மீது அமர்ந்த பின்பு, மிகப்பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தன் தலை மீது வைத்துச் சுமந்து கொண்டு போய்க் கடலில் வீசினார். இதனால் பெரிய பாறைகளின் எடையினை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனிபகவானே சுமக்க வேண்டியதாயிற்று. சனி பகவானால் ஒரு கட்டத்திற்கு மேல் சுமையை தாங்க முடியவில்லை. இதனால் அனுமனின் தலையிலிருந்து கீழே குதித்தார்.

இதைக் கண்ட அனுமன், ‘சனி பகவானே, ஏழரை ஆண்டுகள் என்னிடம் இருக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, இவ்வளவு சீக்கிரம் இறங்கிவிட்டீர்களே?’ என்றார்.
அதற்கு சனிபகவான், ‘அனுமனே, உன்னிடம் ஏழரை நிமிடங்கள் மட்டுமே என்னால் இருக்க முடிந்தது. இதன் மூலம் நான் தோல்வியடைந்தாலும், ராமனுக்கான சேது பாலம் அமைக்கும் பணியில், தங்கள் மூலம் நானும் பாறைகளைச் சுமந்த நற்பேறு பெற்றேன். அதற்காக நான் உனக்கு ஏதாவது நன்மை செய்ய விரும்புகிறேன்’ என்றார்.
அனுமன், ‘ராமனின் பெயரைப் பக்தியுடன் உச்சரித்து வணங்குபவர்களை ஏழரைச் சனிக் காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து காத்தருள வேண்டும்’ என வரம் கேட்டார்.
சனிபகவானும், ‘ராமன் பெயரை உச்சரித்து வணங்கு பவர்கள் மட்டுமின்றி, உன்னை நினைத்து வழிபடுபவர்களுக்கும் துன்பங்களைத் தராமல் நற்பலன்களை அளிப்பேன்’ என்று வரம் அருளினார்.


இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட ராமனாக விஸ்ணு அவதரிக்க, அவருக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவி செய்ய நினைத்த எல்லாம் வள்ளவரான சிவபெருமானே ஆஞ்சநேயராக அவதரித்ததாக ஒரு பக்கம் வரலாறு சான்று பகர்ந்து நிற்கி0ன்றது.
எல்லாம் வல்ல அஞ்சநேயரை வணங்கி பலன் பெறுவோம்.
ஜெய் ஸ்ரீ ராம்.


No comments:

Post a Comment