Saturday, March 12, 2016


இந்த  சிரிப்புக்கு பின்னல் இருக்கின்ற காயங்கள் தெறியுமா?

கடந்த வாரம் தமிழ் சினிமா மிக முக்கியமான இரண்டு நடிகர்களை இழந்திருக்கிறது. ஒன்று தனிப்பட்ட சிரிப்பு என்று ஒன்றுக்கே பெயர் போன குமரி முத்து. இரண்டாவது மணி யார் இந்த மணி னு கேக்காதிங்க
நம்ம கலாபவன் மணி தான். ரொம்ப யோசிக்காதிங்க ஜெமினி படத்து வில்லன் தா பா இந்த கலாபவன் மணி. 

முதலில்  குமரிமுத்துவை பற்றி எழுதுவது சரியாக இருக்கும் என நினைக்கிறன். இதுவே ரொம்ப லேட் தான் இருந்தாலும் பொறுத்துக்கங்க.
குமரி முத்து அந்த சிரிப்புக்கு பின்னாடி நிறையவே சோகங்கள் தாங்கி கொள்ள  முடியாத வலிகள் இருந்திருக்கின்றன.தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் காட்டுப்புதூர் கிராமத்துக்கு அப்போது' பாவைக்கூத்து ' நடத்த ஒரு பிரபலமான ஒரு நாடகக் குழு வந்திருந்தது. அன்றைய தினம் அதே கிராமத்தில் மற்றொரு நாடகமும் நடந்தது. 



அதனை பார்க்க பாவைக்கூத்துக் குழுவும் அமர்ந்திருந்தது.நாடகத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிற்காக திரைக்குப் பின்னாலிருந்து ஏற்ற இறக்கங்களுடன் ஒருவர்  குரல் கொடுத்துப் பாடினார் . அவர் பாடிய முறை  அக்குழுவினருக்கு மிகவும் பிடித்துப் போனதால் குரல் கொடுத்த நடிகரை அழைத்து பாராட்டிய அவர்கள்,  அவரையும் தங்கள் குழுவில் இணைத்துக் கொண்டனர்.



அப்போது  நாடக உலகுக்கும்,  பின்னாளில் திரையுலகுக்கும் திறமையான நடிகர் ஒருவர் கிடைத்து விட்டார் என்பது அந்த குழுவுக்கு அப்போது தெரியவில்லை. ஊர் ஊராக அந்தக் குழுவினருடன் சுற்றி நாடக அனுபவம்பெற்ற அவர்தான் பின்னாளில் வெடிச்சிரிப்பால் ரசிகர்களை அதிர வைத்த குமரி முத்து.


  நகைச்சுவை நடிகர் என தொழில் ரீதியாக நாம் அவரை  குறிப்பிட்டாலும்,  சுயமரியாதை குணமும் திராவிடக்கொள்கையில் தீவிர பற்றும் கொண்டவர். சினிமாவில்தான் குமரிமுத்து, நாடக உலகில் அந்நாளில் அவரது பெயர் வாத்தியார் முத்து.

ஆயிரம் ஆயிரமாம் கலைஞர்களை கண்ட சினிமாவில் ஆச்சர்யமாக ஒரு சிலர் மட்டும் தங்களது தனிப் பட்ட திறமைகள் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவர்கள். அவர்களில் ஒருவர் குமரிமுத்து. 

“ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாாா”... என அரைப்புள்ளி, கமா, முழுப்புள்ளி இன்றி ஒரு வார்த்தையை இழுத்து நீட்டி முழுக்கி சிரிப்பது என்பது அவரது பாணி. அவரது பெயரை குறிப்பிட்டால் நம்மையுமறியாமல் அவரது பாணியிலேயே ஒருமுறை சிரித்துவிடுவோம். அதுதான் குமரிமுத்து தமிழ் சினிமாவில் அவர் வைத்திருந்த அடையாளம் இது தான்.




நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்ல, தேர்ந்த குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய குமரிமுத்து,  சினிமாவுக்கு முதல்தலைமுறை நடிகர் அல்ல. அவரது சகோதரர் நம்பிராஜன் அந்நாளில் மேடை மற்றும் சினிமா பிரபலமாகவே இருந்தாலும் கூட பராசக்தி திரைப்படத்தில் பூசாரியாக வருபவர்தான் குமரிமுத்துவின் சகோதரர். 



இவரது அண்ணியும் பிரபல நடிகை தான். தாம்பரம் லலிதா என்றால் அந்நாளில்  கொடுமையான அண்ணி, வெடுக் வெடுக் என பேசும் ஈவு இரக்கமற்ற பெண்மணி போன்ற கதாபாத்திரம் என்றால் அவர்தான் நினைவுக்கு வருவார். மீண்ட சொர்க்கம், பாகப்பிரிவினை, தெய்வப்பிறவி, உள்ளிட்ட படங்களில் தாம்பரம் லலிதாவின் நடிப்பு அப்பாடி அற்புதம்.
பள்ளிப்பருவத்திலேயே நாடகங்கள் மீது காதல் கொண்ட குமரிமுத்து, அப்போதே சொந்தமாக நாடகங்கள் நடத்தினார். 



நாடகங்கள் மீதான காதலால் எட்டாம் வகுப்போடு புத்தகப்பைக்கு விடை கொடுத்து விட்டு, சென்னைக்கு ரயில் ஏறி, சகோதரரோடு சில பல நாடக முயற்சிகள்  செய்திருந்தாலும் அது கை கூடவில்லை குமரி முத்துவுக்கு. அண்ணனிடம் இருந்து சரியான   பதில்கள், சந்தர்ப்பங்கள்  கிடைக்காததால் தனது முயற்சியிலேயே வைரம் நாடக சபாவின் நாடகங்களில் வாய்ப்பை தேடி வாங்கி நடித்தார்.



ஆயினும் சினிமா வாய்ப்புகள் மிகவு சிரமமாகவே இருந்த காரணத்தினால்  நொந்துபோய் ஊருக்கு திரும்பினார். இந்நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டவர்.  

இதில் பல நாடகங்களை இயக்கவும் செய்தார். நாடகங்களில் பிரதான நகைச்சுவை வேடம் ஏற்று மக்களிடையே பிரபலம் அடைந்தார். அந்த ஆசையில்  அல்லாடிக் கொண்டிருந்த சமயம் மீண்டும் சினிமா ஆசை அவரது மனதில் லேசாக வந்து சேர மீண்டும் சென்னை  நோக்கி புறப்பட்டார்.




இருந்தும் என்ன அண்ணனின் முயற்சியில் சிறுசிறுவேடங்கள் எப்போதாவது கிடைத்தன. கூட்டத்துடன் கூட்டமாக எட்டாவது வரிசையில் நிற்கும் வாய்ப்புதான் அவருக்கு அப்போது கிடைத்த பெரிய வாய்ப்பு.  

70களின் மத்தியில் சில படங்களில் தலைகாட்டினார். சினிமா உலகில் வாய்ப்பு கேட்டு அலைந்தபோது அவரது பெயர் கே.எம்.முத்து. சினிமா உலகை பீடித்திருக்கும் ராசி,  நம்பிக்கை இவரையும் விடவில்லை. ராசிக்காக தன் பெயரை குமரி முத்து என மாற்றிக்கொண்டார்.




1968 ல்,  சென்னை  மைலாப்பூர் (FINE  ARTS ) கலையரங்கத்தில்  குமரிமுத்துவின் நாடகம் அரங்கேறியது. அந்த நாடகத்தை பார்க்க வந்த பிரபல கதை-வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனுக்கு குமரிமுத்துவின் நடிப்பு பிடித்து போக ,  எல்.பாலுவிடம் அவரை அறிமுகப்படுத்தினார். 



விளைவு,  பாலு அப்போது இயக்கிவந்த ‘பொய் சொல்லாதே’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நாகேஷுடன் ஒரே ஒரு காட்சியில் முடிதிருத்துபவராக வருவார். தொடர்ந்து ‘தங்கதுரை’  நடிகை தேவிகா சொந்தமாக தயாரித்த ‘’வெகுளிப் பெண்’’ என சில படங்களில் நடித்தார். ‘இவள் ஒரு சீதை’ படத்தில் காந்திமதியுடன் இணையாக நடித்தார்.


திரைப்பட வாய்ப்புகள் குறைந்து நாடகம்,  சினிமா என இரண்டுங்கெட்டனாக குமரிமுத்து இருந்த காலங்களில் வானொலி மற்றும் மேடை நாடகங்களில் நடித்துவந்தார். கிறிஸ்துவ கலை அமைப்பு ஒன்று நடத்திய நாடகங்களில் குமரிமுத்து நடித்துவந்தபோது,  புகழ்பெற்ற இயக்குநரான மகேந்திரன் அங்கு நாடக வசனங்களை எழுதிக்கொண்டிருந்தார். 



அவருடன் ஏற்பட்ட சந்திப்பு, குமரிமுத்துவிற்கு சினிமாவில் நல்லதொரு இடம் கிடைக்க காரணமானது. நாடக மேடைகளில் இவரது திறமையை அறிந்திருந்த இயக்குநர் மகேந்திரன்,  80களில் தனது படங்களில் குமரிமுத்துவிற்கு நல்ல கதாபாத்திரங்களை வழங்கினார்.


குமரிமுத்துவுக்கென தனியே கைதட்டல்கள் கிடைக்க ஆரம்பித்தது அந்தநாட்களில் இருந்து தான். முள்ளும் மலரும்’ , ‘உதிரிப்பூக்கள்’, ‘நண்டு’ போன்ற படங்கள் குமரிமுத்துவை திறமையான நடிகராக சினிமா ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. 

சினிமா உலகில் நன்கு அறியப்பட்ட நடிகரானார். ‘அழகிய கண்ணே’ படம் வரை ஒன்பது படங்களில் மகேந்திரனுடன் இணைந்து பணியாற்றினார். இவருக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தவை ‘நண்டு’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ ஆகியவை. இனிவரும் தலைமுறைகளுக் கும் குமரிமுத்துவை அறிமுகப்படுத்தப்போகும் திரைப்படங்கள் என இவற்றை குறிப்பிடலாம். 


கே.பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’ படம் குமரிமுத்துவின் திறமையை சொல்லும் முக்கிய படங்களில் ஒன்று. நடிப்பில் அசரடிக்கும் ஆச்சி மனோரமாவின் கணவர் வேடம், கே.பாக்யராஜின் தந்தை கதாபாத்திரத்தில் முடிதிருத்தும் கலைஞராக  அத்தனை பேரையும் அசரடித்திருப்பார்,  அந்த நடிப்பு யதார்த்தத்தின் முழு விம்பம். 

குமரிமுத்துவின் திறமையைச் சொல்லும் மற்ற  படங்களாக  ‘பாலைவனச் சோலை’.ஈரவிழிக்காவியங்கள், தேவி ஸ்ரீ தேவி, இது நம்ம ஆளு, கோழிக் கூவுது, கொக்கரக்கோ, தூரம் அதிகமில்லை, தூங்காத கண்ணின்று ஒன்று, ஏதோ மோகம், பசி, நினைவுகள், இலையுதிர்க் காலம் போன்ற 200–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.





சினிமாவில் வயது வையத் வந்தவராக இருந்தாலும் கூட , தன்னைவிட இளையவர்களிடம் எந்தவிதமான ஆணவமும் இன்றி பழகுவார் நடிப்பார், நடித்தார். இவரது ஒற்றைப்பார்வையையும் அகன்ற சிரிப்பையும் கவுண்டமணி பல படங்களில் கிண்டலடிப்பதுண்டு. 

சினிமாவின் மீதும்,  ரசிகர்களை சிரிக்கவைப்பதிலும் உள்ள ஆர்வத்தில் அவற்றை அனுமதிப்பார்.
அப்படி பட்ட ஒரு நிதர்சனமான ஒரு நடிகர் நம் மத்தியில் இன்று இல்லை. அவர் மறைந்தாலும் அவரது சிரிப்பொலி என்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கும் சினிமா என்ற கண்ணாடியின் வழியாக !

No comments:

Post a Comment