Tuesday, March 15, 2016

சில நாட்களாகவே பார்க்க வேண்டும் என்று நினைத்த ஒரு திரைப்படம்.
திடிரென அன்று அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு, வீட்டில் அமர்ந்திருந்த சந்தர்ப்பத்தில் எனக்குள் எதோ ஒரு கவலை, ஏதோ இழந்த சோகம் எனக்குள் இயல்பாகவே பீறிட்டது. இதற்கான காரணத்தை நான் மட்டுமே அறிவேன். (அந்த சோகத்துக்கான, இழப்புக்கான தேர்வு எப்போதுமே எனக்கு கிடைக்காது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்). 


திடிரென மனதுக்குள்  கயல் படம் பாருங்க அப்பானு என்னவள் சொன்ன வார்த்தை என் மனதில் வர அந்த நிமிடம் ஒரு துளி கண்ணீரோடு படம் பார்க்க தொடங்கினேன்.......   ஒரு கதை, ஒரு சினிமா... உயிரின் ஆழம் வரை சென்று உணர்வுகளின் தீவிரம் கரைத்து, வாழ்வியலோடு தொடர்பு படுத்தி... காதலாய் தீபம் ஆகும் என்பதில் ஐயம் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை....  ( படம் அப்படி) அவள் கண்கள்........ அந்த கண்களைத் தேடுவதாய் என் அக மனது சொல்ல
திரைப்படத்தை தொடர்ந்தேன்.........,
தனக்கென யாருமே ஆறுதல் கூறக் கூட இல்லாத நிலையில் நம் என நினைப்போம் நமது இஷ்டம் போல நமது வாழ்கையை வாழ தான் நினைபோம் படி ஒரு வாழ்கையை வாழ்பவன் தான் இந்த திரைப்படத்தின் நாயகன் கயல் சந்திரன்.  

தனது நண்பனுடன் ஊர் ஊராக சுற்றி திரியும் அவனுக்கு  யாரும் எதிர் பார்க்காத விதமாக ஊரைவிட்டு ஓடும் காதல் ஜோடியை அவர்கள் சந்திக்க நேர்கிறது. உண்மை நிலை தெரியாமல் அவர்களுக்கு உதவி செய்யப்போய், பெண்ணின் குடும்பத்தினரிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கே அப்பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.



இவர்கள் பெண்ணை கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள் என நினைத்து அவர்களைப் பற்றிய தகவல்களை பெற கட்டி வைத்து அடிக்கிறது அந்த சாதி வெறிப்பிடித்த கும்பல் நாயகனையும் அவனது நண்பனையும். தங்களுக்கு எந்த தொடர்புமில்லை என அவர்கள் கெஞ்சியும் அந்தக் கும்பல் நம்ப மறுக்கிறது. அவ்விருவரிடமும் உண்மையை வரவழைப்பதற்காக அவர்கள் வீட்டில் வேலை செய்யும் கயல் என்கிற பெண்ணை தூதாக அனுப்புகிறார்கள். 

அதுவரை தனக்கு காதல் வரும்படி எந்தப்பெண்ணையும் பார்க்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஹீரோவுக்கு கயலைப் பார்த்தவுடன் காதல் தீ அனைய முடியாதவாறு பற்றிக்கொள்கிறது. பெண்ணைக் காணாமல் வெளியில் வெறியில் திரியும் அந்தக் கும்பலின் முன்பாகவே கயலை காதலிப்பதாக சொல்கிறான் ஆரோன்.

(நாயகன்) ஏற்கனவே கொலைவெறியில் இருப்பவர்களுக்கு இது இன்னும் ஆத்திரமூட்ட, அவனை கொலை செய்யும் முடிவுக்கு வருகிறார்கள். அக்கட்டத்தில் ஓடிப்போன பெண் திரும்பக்கிடைக்க, அவனுக்கு உயிர்பிச்சைக் கொடுத்து அங்கிருந்து விரட்டி விடுகிறார்கள்.
இதற்கிடையில் , அத்தனைப் பேர் முன்னிலையிலும் தன்னைக் காதலிப்பதாக சொன்ன ஆரோன் மீது கயலுக்கு காதல் அரும்புகிறது. காதல் வலியால் துடிப்பவளை காதலனை தேடிச்செல்லுமாறு அவளது பாட்டி யோசனை சொல்ல, காதலனைத் தேடிப்புறப்படுகிறாள் கயல்.

கயல் தன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறாள் என்பதைப் பிறகு தெரிந்து கொண்ட ஆரோனும் மறுபுறம் கயலைத் தேடுகிறான்.
இறுதியில் ஆரோன், கயலைத் தேடி கண்டுபிடித்தானா? அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா..? இல்லையா..? என்பதே கயல் படத்தின் மீதிக்கதை.முந்தைய இரண்டு படங்களைப் போல் இல்லாமல் இதில் சுபமான முடிவு அமையவேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்திருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது .ஆரோனாக புதுமுகம் சந்திரன், கயலாக ஆனந்தி. மைனா சித்தார்த்-அமலாபாலை ஞாபகப்படுத்துகிறார்கள். 

இருவரில் கயல் மட்டுமே நம்,என்  கண்களில் நிறைகிறார். துரு துரு கண்கள், வெள்ளந்திப் பார்வை, திருஷ்டியாய் உதட்டுக்குக் கீழ் பெரிய மச்சம், மாநிற தோற்றம் என்று ஒரு கிராமத்து தேவதையை அச்சு வார்த்தது போல் அவளது அழகு மட்டும். தான் காதல் வயப்பட்டதை வெளிப்படுத்தும் இடத்தில் அவளது நடிப்பு யதார்த்தத்தின் மறு உருவமாய்....
சாக்ரடிசாக வரும் நண்பர் காமெடி செய்வதாக நினைத்துக் கொண்டு அவ்வப்போது பேசும் வசனம் புரியவும் இல்லை, புரிந்த சில இடங்களில் சிரிப்பும் வரவில்லை. 

இயக்குனரின் ஆஸ்தான காமெடியன் தம்பி ராமையா இல்லாத குறை நன்றாகத் தெரிகிறது.இந்தப் படத்தில் பெருங்குறையாக நிறைய கேரக்டர்கள் பேசும் வசனங்கள் தெளிவாக இல்லை. கல்யாண வீட்டில் சித்தப்பாவாக வரும் அந்தப் பெரியவர் பேசுவதைப் புரிந்துகொள்ளவே சிறிது நேரமெடுக்கிறது. ஒரே ஒரு காட்சியில் பிரபு வருகிறார்.

படத்தில் முக்கிய பலம் என்று கடைசி 15 நிமிடங்களை சொல்லலாம். கன்னியாகுமாரி வள்ளுவர் சிலை அருகில் உருவாகும் சுனாமியை தத்ரூபமாக கொண்டுவந்ததற்காக பெரிய சபாஷ். சுனாமியின் பின்னணிக்காக டால்பி அட்மாஸ் என்கிற புதிய இசை வடிவத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். மிரட்டலாக இருக்கிறது.ஒரு மென்மையான காதலை முரட்டுத்தனமாக சொல்லும் பிரபு சாலமனின் அதே கதைதான். ஆனால் மைனாவும் கும்கியும் தொட்ட காதலின் ஆழமான உணர்வை கயல் தொடவில்லை. முன்பாதியில் விழுந்த தொய்வை கடைசி 15 நிமிடங்கள் காப்பாற்றுகிறது.

சுனாமியை தத்ரூபமாக காட்டிய வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு அற்புதம். மேலும் இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் விதம்.
தவிரவும் படத்தின் பாடல்கள் அற்புதம் அதுவும் என் 'ஆல பாக்க போறே' , 'எங்க புள்ள இருக்க' , " உன்ன இப்போ பாக்கனும்"  போன்ற பாடல்கள் அற்புதம் அதி அற்புதம். கும்கி படத்திலும் தனது தனி பட்ட இசையால் இளைஞர்களை கிறங்கடித்த டி.இமான் னுக்கு என் சார்பாகவும், அவரது ரசிகர்கள் சார்பாகவும் ஒரு பெரிய பூங்கொத்து.
மொத்தத்தில் கயல் கண்ணீரில்  என்னை கரைய விட்ட பழைய காதல் கதை  .....

No comments:

Post a Comment